ETV Bharat / state

ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பணப்பலனை அளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Oct 13, 2022, 6:37 PM IST

உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு, பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்த நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பணப்பலனை அளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீதிமன்றம்
சென்னை நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில், பணப்பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் நேரில் ஆஜரானார். அப்போது அரசுத் தரப்பில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரனுக்கு ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பணம் எப்போது மனுதாரருக்கு வழங்கப்படும் எனக் கேள்வி எழுப்பினர். இரு வாரங்களில் பணம் மனுதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மனுதாரரை மிரட்டுவதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார். இது தீவிரமானது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.